ஈஸ்டர் தாக்குதல் விசாரணையின் பின்னணியில் சிறையிலிருந்த வாறே ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் பங்கேற்ற ரிசாத் பதியுதீனிடம் நேற்றைய தினம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.


காடழித்து மீள் குடியேற்றம் செய்ததாக குற்றஞ்சாட்டப்படுவதை மறுத்துள்ள அவர் உச்ச நீதிமன்றை நாடப் போவதாகவும் பசில் ராஜபக்சவே மீள்குடியேற்றத்துக்கு உதவியதாகவும் தெரிவித்திருந்த அதேவேளை, தனது சகோதரன் ரியாஜுக்கும் ஈஸ்டர் தாக்குதல்தாரியொருவருக்கும் இடையில் தொலைபேசி உரையாடல்கள் இடம்பெற்றுள்ளமை குறித்து பின்னர் அறிந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, அகதியாக வந்ததாகக் கூறும் உங்களிடம் இவ்வளவு சொத்துக்கள் இருப்பது எவ்வாறு? எனவும் வினவப்பட்ட பொது, அதில் அதிருப்தியடைந்த ரிசாத், ஈஸ்டர் தாக்குதலைப் பற்றி விசாரியுங்கள், 2001ம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நான் எனது சொத்து விபரங்கள் அனைத்தையும் பிரகடனம் செய்துள்ளேன். குடும்ப வர்த்தகத்தை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சாராக இருப்பது ஒரு தடையாகாது எனவும் விளக்கமளித்துள்ளார்.


இதேவேளை, தனது அரசியல் பதவியை வர்த்தக நடவடிக்கைகளுக்கு சாதகமாக உபயோகிக்கவில்லையெனவும் அவர் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.