Bay of Plenty கடற்கரையில் விளக்குகள் எரியாமல் வாகனம் ஓட்டிச் சென்றதாக கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

29 வயதான குறித்த நபர் பொலிஸாரிடமிருந்து தப்பி ஓட முயன்றபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கி ஒன்று காரில் இருந்ததை அடுத்து அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை Papamoa கடற்கரையில் விளக்குகள் எரியாமல் கார் ஒன்று ஓட்டிச் சென்றது குறித்து தங்களுக்கு புகார் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து காலை 5.30 மணிக்கு சற்று முன் Station வீதி, Te Puke இல் அந்த காரை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

காரை நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை செய்த போதிலும் அவர் நிறுத்தத் தவறியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து Te Puke வில் உள்ள, King Street இல் காரை நிறுத்திவிட்டு, கால் நடையாகத் தப்பிச் சென்ற குறித்த நபர் பின்னர் சிறிது நேரத்தில் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதனிடையே அந்த காரில் பணம், மெத்தம்பெட்டமைன் மற்றும் துப்பாக்கி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர் ஆகஸ்ட் 14 அன்று Tauranga மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

செய்தி நிருபர் - புகழ்