சீனாவில் தொடரும் கனமழை காரணமாக ஏற்பட்ட பாரிய மண்சரிவில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள மீஜௌ நகரத்திற்கும் டபு நகரத்திற்கும் இடையேயான வீதியின் ஒரு பகுதியிலேயே நேற்று அதிகாலையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

குறித்த வீதியில் பயணித்த 18 வாகனங்களும், அதில் பயணித்த 49 பேரும் ஆபத்தில் சிக்கிய நிலையில் 19 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் 30 பேர் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன் அவர்கள் அபாயக்கட்டத்தை தாண்டியுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் மீட்பு நடவடிக்கைக்கு உதவ சுமார் 500 பேர் அடங்கிய குழு அங்கே முகாமிட்டுள்ளதுடன், வழக்கமான பாதுகாப்பு, அவசர கால தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ஆகியோருடன் சுரங்க மீட்பு குழுவினரும் அதில் அடங்கியுள்ளனர்.

தென் சீனாவின் மிகவும் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட தொழில்துறை ஆற்றல் மையமான இந்த பிராந்தியம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.