இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2024ஆம் ஆண்டுக்கான தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர பந்துவீச்சாளரான லசித் மாலிங்க நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

கடந்த 09 ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக செயற்பட்டு வந்த ஷேன் போன்ட் தனது பதவியில் இருந்து விலகிய நிலையிலையே லசித் மாலிங்கவிற்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளர் பதவி வழங்கப்பட்டிருக்கின்றது.

லசித் மாலிங்க மும்பை இந்தியன்ஸ் அணி 2013, 2015, 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் IPL சம்பியன் பட்டம் வென்றிருந்த போது அதில் விளையாடியிருந்ததோடு 2021ஆம் ஆண்டு IPL போட்டிகளில் ஓய்வு பெற்று, ராஜாஸ்தான் ரோயல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக செயற்பட்டிருந்தார்.

இதனிடையே லசித் மாலிங்க 2018ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக செயற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.