மத்திய பிரதேசத்தில் சமூக வலைதளங்களை பார்த்து துப்பாக்கி, ஆயுதங்களை தயாரித்த சிறுவர்களை போலீசார் கைது செய்து உள்ளனர்.

மத்திய பிரதேசம்  ஜபல்பூரில் சஞ்சீவனி நகரில் உள்ள ஓரியண்டல் கல்லூரி அருகே போலீசார் வாகன சோதனை நடத்தி கொண்டு இருந்தனர். அப்போது ஹெல்மெட் அணியாமல் இரண்டு சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து உள்ளனர்.

அவர்களை போலீசார் வண்டியை நிறுத்துமாறு கூறி உள்ளனர். ஆனால் அவர்கள் வண்டியை நிறுத்தாமல் வேகமாக சென்றனர். போலீசார் அவர்களை துரத்தி பிடித்து  சந்தேகத்தின் பேரில்  சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் ஒரு நாட்டுத் துப்பாக்கி மற்றும் பட்டன் கத்தி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன . உடனடியாக போலீசார்  அவர்களை  கைது செய்து அவர்கள் வீட்டில் சோதனை நடத்தினர். வீட்டில் இரண்டு நாட்டுத் துப்பாக்கிகள், ஒரு இரட்டைக் குழல் துப்பாக்கி, எட்டு வாள்கள், கத்திகள், மற்றும் ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்களை போலீசார் கைப்பற்றினர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கைதான சிறுவர்களில் ஒருவருக்கு வயது 16, மற்றவருக்கு 15.  ஒருவர் 4 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார், மற்றவர் 5 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார்.  இரண்டு பேரும்  சமூக ஊடகங்களை பார்த்து  துப்பாக்கி தயாரிப்பதைக் கற்றுக்கொண்டுள்ளனர்.

15 வயது சிறுவன் தனது வீட்டில் ஆயுதங்களை தயாரித்ததை ஒப்புக்கொண்டான். அவனது தந்தை ஒரு எலக்ட்ரீஷியன் என்றும், பகலில் வேலைக்குச் சென்ர பிறகு ​​ஆயுதங்களைத் தயாரிக்க அவரது கருவிகளைப் பயன்படுத்தியதாகவும் கூறி உள்ளான்.

அது மட்டுமின்றி, ஏசி குளிரூட்டிகளில் பயன்படுத்தப்படும் செப்புக் குழாய்களை சிறிய துண்டுகளாக வெட்டி, தீக்குச்சிகளில் பயன்படுத்தப்படும் வெடிமருந்து பொடியை நிரப்பி தோட்டாக்களை தயாரித்து உள்ளனர் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.