சீனாவின் "சிவப்புக் கோடுகளில்" அடியெடுத்து வைப்பதை அமெரிக்க தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அமெரிக்காவை சீனா எச்சரித்துள்ளது.

சீன வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட உயர்மட்ட இராஜதந்திரிகளை சந்தித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனிடம் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சீன உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுடன் பல முக்கிய விடயங்கள் குறித்து அவர் கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பெய்ஜிங்கில் நேற்று (26) சீன வெளிவிவகார அமைச்சர் வாங்யியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சீனாவும் அமெரிக்காவும் "ஸ்திரத்தன்மை மற்றும் சரிவு" ஆகியவற்றுக்கு இடையே ஒரு தேர்வு உள்ளது என்று வாங் யி சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கனின் இந்த வருடத்திற்கான இரண்டாவது சீனா விஜயம் இதுவாகும். இதன்படி பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, ரஷ்யாவுக்கு சீனாவின் ஆதரவு, தென் சீனக் கடலில் நிலவும் சிக்கல் நிலை மற்றும் தைவானுக்கு எதிரான அதன் ஆக்கிரமிப்பு ஆகியவை இரு நாடுகளின் முக்கிய பிரச்சினைகளாக பார்க்கப்படுகிறது.

இதன்போது "சீனாவும் அமெரிக்காவும் ஸ்திரத்தன்மையுடன் முன்னேறுவதற்கான சரியான திசையில் இருக்க வேண்டுமா அல்லது கீழ்நோக்கிய சுழலுக்குத் திரும்ப வேண்டுமா என சீன வெளியுறவு அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விஜயமானது உரையாடல் மற்றும் இராஜதந்திரத்தில் கணிசமான அதிகரிப்பின் ஒரு பகுதியாகும், என அமெரிக்க கருத்து வெளியிட்டுள்ளது.

மேலும், தைவான் மற்றும் தென் சீனக் கடல் மீதான சீனாவின் உரிமைகோரல்களாலும், மேம்பட்ட தொழில்நுட்பத்தின் மீதான அமெரிக்க ஏற்றுமதி தடைகளாலும் உறவுகள் சிதைந்துள்ளமை பேச்சுவார்த்தையில் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.