உக்ரைன் யுத்தம் உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் நிலையில் வட கொரியா இந்த ஆண்டின் 9வது ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளது.

இந்த வருடம் தொடங்கி 3 மாதத்தில் 9வது ஏவுகணை சோதனையை நடத்தி அமெரிக்காவுக்கு எரிச்சலைக் கொடுத்துள்ளது வட கொரியா.

கொரிய தீபகற்பத்தின் கிழக்கே நடந்த இந்த சோதனையில் சீறிப் பாய்ந்த ஏவுகணை பின்னர் கடலில் விழுந்தது. சோதனை வெற்றிகரமாக இருந்ததாக வட கொரியத் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் கொரிய தீபகற்பத்திற்கு மட்டுமல்லாமல், சர்வதேச சமுதாயத்திற்கும் இந்த சோதனை மிரட்டல் தருவதாக என்று தென் கொரியா கூறியுள்ளது.

வட கொரிய தலைநர் பியாங்காங்குக்கு அருகே உள்ள சுனான் என்ற இடத்திலிலிருந்து ஏவுகணை செலுத்தப்பட்டது.

இந்த ஏவுகணை சோதனையின் விளைவுகள் குறித்து அமெரிக்காவும், தென் கொரியாவும் ஆராய்ந்து வருகின்றன.

உக்ரைனில் யுத்தம் வலுத்து வரும் நிலையில் வட கொரியா இப்படி ஏவுகணை ஏவுவது சரியல்ல என்று தென் கொரிய நாட்டின் பாதுகாப்பு கவுன்சில் எச்சரித்துள்ளது. வட கொரியா இப்படிப்பட்ட செயல்களை நிறுத்த வேண்டும் என்றும் அது கோரியுள்ளது.

உக்ரைன் யுத்தம் மட்டுமல்ல, சீனாவில் குளிர்கால பாராலம்பிக்ஸ் போட்டிகள் நடைபெறவுள்ளன. அதேபோல தென் கொரியாவில் மார்ச் 9ம் திகதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால் இவை எதைப் பற்றியும் கவலைப்படாமல் தான் உண்டு, தன் சோதனை உண்டு என்று அடாவடி செய்து வருகிறது வட கொரியா.

இந்த ஏவுகணை சோதனைக்கு அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்துள்ளது. சோதனை செய்து பார்க்கப்பட்ட ஏவுகணையானது அமெரிக்கா வரை சென்று தாக்கக் கூடிய வல்லமை பெற்றதாக கூறப்படுகிறது. இதுதான் அமெரிக்காவை எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது.

வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனைக்கு இன்னொரு காரணத்தையும் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

அதாவது ரஷ்யா விவகாரத்திலிருந்து அமெரிக்காவை திசை திருப்புவதற்காக ரஷ்யாவின் தூண்டுதலின் பேரில் இந்த சோதனையை வட கொரியா நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. உக்ரைன் மீதான கவனத்திலிருந்து உலக நாடுகளை திசை திருப்பும் உத்தியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது என்பது அவர்களின் கருத்தாகும்.