இந்தியா: தமிழ்நாடு

மக்களவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று காலை முதல் நாளை மாலை வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிகவின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த பிரேமலதா, "இன்னும் ஓரிரு நாளில் நல்ல அறிவிப்பை தருவோம். தேமுதிக யாருடன் கூட்டணி, எத்தனை சீட், எந்த தொகுதி என்பது குறித்த விவரம் அறிவிக்கப்படும். இன்றும், நாளையும் விருப்ப மனு வழங்கப்படுகிறது. இன்னும் இரண்டு நாட்கள்தான். வியாழக்கிழமை அனைத்து விவரங்களும் முறையாக அறிவிக்கப்படும்" என்று கூறினார்.

அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது தேமுதிக. இதுவரை மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ள நிலையில், கூட்டணி இன்னும் இறுதியாகவில்லை. இந்த நிலையில்தான் இரண்டு நாட்களில் கூட்டணி குறித்து முழு அறிவிப்பு வெளியாகும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.