இந்தியா: தமிழ்நாடு

லோக்சபா தேர்தல் திகதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கு முன்பாக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை ஆரம்பித்து விட்டன.

இந்நிலையில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி கடந்த சட்டசபைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. லோக்சபா தேர்தலில் பாஜக உடன் இணையலாமா அல்லது அதிமுக உடன் கூட்டணி சேரலாமா என்று குழப்பத்தில் இருந்தார் சரத்குமார். கும்பகோணத்தில் கட்சி நிர்வாகிகளுடன் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் பாஜக உடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார் சரத்குமார்.

இது தொடர்பாக சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் திரு.அரவிந்த் மேனன் அவர்கள் பிப்ரவரி 28 ஆம் தேதி என்னை நேரில் சந்தித்து, பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் ஒருமித்த கருத்துகள் உடன்பட்டதால் நேற்று மத்திய அமைச்சர் எல். முருகன் அவர்கள், தேசிய செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹெச்.ராஜா அவர்கள், பாஜக தமிழக பொறுப்பாளர் மற்றும் தேசியச் செயலாளர் திரு.அரவிந்த்மேனன் அவர்கள் ஆகிய மூவரும் குழுவாக வந்து என்னை சந்தித்து கூட்டணி குறித்து மீண்டும் பேசினார்கள்.

இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தேறியது. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்டக்குழு, மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஏற்கெனவே எனக்கு பாராளுமன்றத் தேர்தலில் முடிவெடுக்கும் அதிகாரத்தினை வழங்கி, எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில், நாடு வளம் பெற, ஒற்றுமையுணர்வு ஓங்கிட, மீண்டும் நல்லாட்சி அமைந்திட மூன்றாவது முறையாக நரேந்திர மோடி அவர்கள் பாரத பிரதமராக தேர்ந்தெடுக்க பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளேன். மற்ற விபரங்களை இன்னும் ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.