ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான நகரங்களில் ஒன்றான சிட்னி பெருநகரப் பகுதி பேரக்குழந்தைகள் இல்லாத பகுதியாக மாறும் என ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் உற்பத்தித்திறன் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சிட்னி ஒவ்வொரு ஆண்டும் 30 முதல் 40 வயதுக்குட்பட்ட 7000 பேரை இழக்கிறது. அதிகரித்து வீட்டு வாடகையும், சொந்த வீடு வாங்க முடியாத அளவு விலை அதிகரிப்பும், இளைஞர்களை குடும்பத்துடன் வெளியேறச் செய்கிறது.

கமிஷன் நடத்திய ஆய்வில், சிட்னி 2016 மற்றும் 2021 க்கு இடையில் 30 முதல் 40 வயதுடையவர்களின் எண்ணிக்கை, இருமடங்கு குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிட்னி இருமடங்கு மக்களை இழக்க நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சிட்னியில் தேவைக்கு ஏற்ப வீட்டுவசதியை பராமரிக்க முடியாமல் போனது மற்றும் மலிவு விலையில் வீடுகள் கிடைக்காமல் போனது போன்ற காரணங்களை அடிப்படையாக கொண்டு இந்த நிலை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸில் தற்போதைய வீட்டு தேவையை பூர்த்தி செய்ய 2041 ஆம் ஆண்டளவில் 900,000 வீடுகள் கட்டப்பட வேண்டும் என் மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் இதே நிலை நீடித்தால், பேரக்குழந்தைகள் இல்லாத நகரமாக சிட்னி அறியப்படும் என உற்பத்தித் திறன் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.