இந்தியா: தமிழ்நாடு

திமுக பேச்சாளராக இருந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். அப்போது குஷ்புவின் தாயை தவறாக பேசும் வகையில் கடுமையான வார்த்தைகளை உபயோகப்படுத்தினார்.

இதனால் கொந்தளித்த குஷ்பு, நேற்று செய்தியாளர்களை சந்தித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தார்.

அவர் பேசுகையில் பெண்கள் பற்றி அவதூறாக பேச இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. கருணாநிதி இருந்த போது திமுக இப்படி இல்லை. இவர்கள் பெண்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு கருணாநிதியை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆண்கள் ஒரு பெண்ணை இழிவாக பேசும் போது அவர்களை அந்த பெண்ணை ஒரு மகளாகவோ மருமகளாகவோ தாயாகவோ பார்ப்பதில்லை. நான் எனக்காக பேசவில்லை, என் மகள்களுக்காகவும் மற்ற பெண்களுக்காகவும் பேசுகிறேன். பெண்கள் குறித்து தவறாக பேச யாருக்கும் தைரியம் வரக் கூடாது. இது போன்ற ஆட்களைத்தான் திமுகவில் தீனி போட்டு வளர்க்கிறார்கள்.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய மொழியிலேயே என்னால் பேச முடியும். ஆனால் நான் அப்படி செய்தால் என் வளர்ப்பு தவறாகிவிடும். என்னை சீண்டி பார்க்காதீர்கள், தாங்க மாட்டீர்கள் என கோபமாக கொந்தளித்த குஷ்பு ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டார்.

குஷ்பு மீது அவதூறு பேசிய நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.