இலங்கை

சூரிய ஒளி, காற்று, உயிரி மற்றும் மின்சார இணைப்பு ஆகிய துறைகளில் இலங்கை அரசாங்கத்திற்கு சாத்தியமான அனைத்து தொழிநுட்ப உதவிகளையும் வழங்க இந்தியா இணங்கியுள்ளது. குறித்த செய்தியை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம், இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கிடையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையின் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது.

இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தின் கீழ் அமைக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொடர்பான கூட்டு செயற்குழுவின் முதல் கூட்டம், கொழும்பில் அண்மையில் நடைபெற்றுள்ளது.

கூட்டத்திற்கு இந்திய தரப்பில் இருந்து புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் பூபிந்தர் சிங் பல்லா மற்றும் இலங்கை தரப்பில் இருந்து மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் சுலக்சன ஜெயவர்தன ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர்.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவும் கலந்து கொண்டுள்ளதோடு இதன்போதே இந்தியாவினால் இலங்கைக்கு இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.