17 ஆம் நூற்றாண்டின் களவுபோன ஓவியத்தை மாறாட்டம் செய்ததால் இத்தாலிய அமைச்சர் ஒருவர் பதவி விலகியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினரும், கலாச்சார அமைச்சருமான 71 வயதான விட்டோரியொ ஸ்கார்பி பதவி விலகியுள்ளார். 

ஐரோப்பாவில் உள்ள பண்டைய நாடு, இத்தாலி. ரோமானிய கலாச்சாரத்தை பறைசாற்றும் இத்தாலி. நாட்டில் பழங்கால ஓவியங்களுக்கும் ஓவியர்களுக்கும் இன்றளவும் ஆர்வலர்கள் அதிகம்.

நாட்டின் 605 இடங்களை கொண்ட பாராளுமன்ற உறுப்பினரும், கலாச்சார அமைச்சருமான 71 வயதான விட்டோரியொ ஸ்கார்பி பழமையான கலைப்பொருட்கள் மற்றும் அரிய ஓவியங்களை வாங்குவதில் ஆர்வம் கொண்டவர்.

2013ல், இத்தாலியின் வடக்கு பீட்மான்ட் பகுதியில் உள்ள ஒருவருக்கு சொந்தமான கோட்டையில் பல ஆண்டுகளாக இருந்த 17-ஆம் நூற்றாண்டை சேர்ந்த ருடிலியோ மானெட்டி எனும் ஓவியர் வரைந்த "தி கேப்ச்சர் ஆஃப் செயின்ட் பீட்டர்" எனும் ஓவியம் திருடு போனது.

2021ல் அமைச்சர் ஸ்கார்பி ஏற்பாடு செய்திருந்த ஒரு கண்காட்சியில் இந்த ஓவியம் மீண்டும் காட்சிக்கு வைக்கப்பட்டது. 2013ல் காணாமல் போன ஓவியம் போலவே இது இருந்தாலும், இந்த ஓவியத்தின் இடது மேற்புறத்தில் ஒரு மெழுகுவர்த்தி தென்பட்டது.

சுமார் 20 வருடங்களுக்கு முன் தனது தாயார் வாங்கிய ஒரு பழமையான வில்லாவில் இதை கண்டெடுத்ததாகவும், இதுதான் ருடிலியோ மானெட்டியின் "அசல்" ஓவியம் என்றும் 2013ல் களவு போனது "நகல்" என்றும் ஸ்கார்பி கூறி வந்தார். எனினும் , 2013ல் களவு போன ஓவியத்தில் கைதேர்ந்த ஓவிய நிபுணர்களை கொண்டு ஸ்கார்பி சில மாற்றங்கள் செய்து புதியதாக காட்டியதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து காணாமல் போன ஓவியத்தை தேடவும், ஸ்கார்பியின் ஓவியம் உண்மையா அல்லது 2013ல் களவு போன ஓவியமா என கண்டறியவும் விசாரணை முடுக்கி விடப்பட்டது. தொடர்ந்து எழுந்த விமர்சனங்களின் விளைவாக அமைச்சர் விட்டோரியோ ஸ்கார்பி, தற்போது தனது பதவியை ராஜினாமா செய்தார்.

நான் எந்த குற்றமும் செய்யவில்லை. விசாரணைக்கு எனது பதவி இடையூறாக இருக்க கூடும் என்பதால், நான் பதவி விலகுகிறேன். அதோடு பிரதமர் ஜியோர்ஜியா மெலனிக்கு தகவல் தெரிவித்து விட்டேன்" என அமைச்சர் ஸ்கார்பி தெரிவித்தார்.