இலங்கை

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் தொலைபேசி பயன்பாட்டில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு நிலையான தொலைபேசிகள் 19.4 சதவீதத்தினாலும், அலைபேசிகள் 5.3 சதவீதத்தினாலும் வீழ்ச்சியடைந்துள்ளன. நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அரச நிதி முகாமைத்துவ அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இணைய பயனர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டின் முதல் அரையாண்டு பகுதியில் ஒரு சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டின் முதல் அரையாண்டு பகுதியில் 100 பேருக்கு 146.9 தொலைபேசிகள் காணப்பட்டன.

எனினும் 2023ம் ஆண்டு அதே காலப் பகுதியில் இந்த எண்ணிக்கை 137 ஆக குறைவடைந்துள்ளது. பெறுமதி சேர் வரி அதிகரிப்பு காரணமாக தொலைபேசிகளின் விலைகளில் அதிகரிப்பு பதிவாகியுள்ளமையும் இதற்கு முக்கிய காரணமாக தெரிவிக்கப்படுகிறது.