தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் எஸ்.பி.ஜனநாதன். தற்போது விஜய்சேதுபதி, ஸ்ருதி ஹாசன் நடிப்பில் லாபம் படத்தை இயக்கி இருந்தார். படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிவடைந்த நிலையில், போஸ்ட் புரோடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. 'லாபம்' படத்தின் இறுதிக்கட்ட எடிட்டிங் பணிகளில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் பணியாற்றி வந்தார்.

கடந்த மார்ச் 11ம் தேதி எடிட்டிங் பணியில் இருந்து ஜனநாதன் வீட்டிற்கு போய் சாப்பிட்டு விட்டு வருவதாக கூறியுள்ளார். வெகு நேரமாக அவர் எடிட்டிங் பணி நடக்கும் இடத்திற்கு வராததால் அவருடைய உதவியாளர் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் வீட்டில் சுயநினைவின்றி கிடந்துள்ளார்.

உடனடியாக அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துப் பரிசோதனை செய்தார்கள். அவரது மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவருடைய உயிர் பிரிந்தது. எஸ்.பி.ஜனநாதனின் திடீர் மறைவு தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.