வட ஆபிரிக்கா - சஹாரா பாலைவனத்தின் மணல் பரவியதன் காரணமாக தெற்கு கிரீஸ் நகர வான்பகுதி முழுவதும் செம்மஞ்சள் நிறமாக மாற்றமடைந்துள்ளது. 

இந்த காலநிலை மாற்றமானது, கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகியுள்ளதென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இது குறித்து மேலும் தெரிய வருகையில், மத்தியதரைக் கடல் வழியாக வீசிய பலத்த காற்றின் காரணமாக அப்பகுதியை அண்டிய மேகங்களை சஹாரா பாலைவனத்தின் தூசிகள் சூழ்ந்துள்ளன. 
 
இந்நிலையில், நேற்றைய தினம் வீசிய காற்றின் வேறுபட்ட திசை காரணமாக குறித்த மேககூட்டங்கள் நகர தொடங்கியுள்ளதுடன் இந்த மாற்றம் விரைவில் சீரான நிலைக்கு வருமென கணிக்கப்பட்டுள்ளது. 

அண்மைக்காலமாக ஏதென்ஸ் நகர்ப்பகுதியில் காணப்படும் அதிக வெப்பம் மற்றும் பலத்த காற்றினாலும் பருவமில்லாத காட்டுத் தீ பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மொத்தம் 25 காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஒவ்வொரு கோடை காலத்திலும் கிரீஸினை அண்டிய பகுதிகளில் பேரழிவுகளை விளைவிக்கும் காட்டுத்தீக்கள் பரவுகின்றன. 

இந்நிலையில், கடந்த ஆண்டில் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய காட்டுத்தீயினை கிரீஸ் நாடு எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.