தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கும் 'லத்தி' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் காசிக்குச் சென்றிருந்த விஷால் பிரதமர் மோடியைப் பாராட்டி அவருக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக விஷால், "அன்புள்ள மோடி ஜி, காசிக்கு சென்றிருந்த நான் அங்கு நல்ல தரிசனம் செய்தேன். கூடவே, கங்கை நதியின் புனித நீரைத் தொட்டேன். காசி கோவிலைப் புதுப்பித்து அதை இன்னும் அற்புதமாகவும் எல்லோரும் எளிதாக தரிசனம் செய்யும் வகையிலும் மாற்றம் செய்திருப்பதற்காக உங்களைக் கடவுள் ஆசீர்வதிப்பாராக. சல்யூட்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

விஷாலின் இந்த பாராட்டிற்கு மோடியும், "காசியில் உங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி" எனப் பதில் ட்வீட் செய்திருந்தார். 

இந்நிலையில் விஷாலின் அந்த பதிவை நடிகர் பிரகாஷ்ராஜ் ரீ-ட்வீட் செய்துள்ளார்.

படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சி படமாக்கப்பட்டு முடிந்த பிறகு 'நடிச்சது போதும்‌ அடுத்த காட்சிக்கு ரெடி பண்ணுங்க' என்று ஒரு இயக்குநர் சொல்வது போல, "ஷாட் ஓகே..அடுத்து" எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலாக பதிலளித்துள்ளார்.

இந்த பதிவு தற்போது பலரது கவனத்தைப் பெற்று வருகிறது.