தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. முன்னதாக 40 கோடி ரூபாய்க்கு கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும் மேலும் கட்டுமான பணிகளை நிறைவு செய்ய 25 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் பலரும் நிதியுதவி செய்து வருகின்றனர்.

இதற்கான நிதி தொடர்ந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக விஜய், உதயநிதி ஆகியோரும் கட்டுமான பணிகளுக்காக தலா ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்திருந்தனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனும் தன்னுடைய சொந்த நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். இதுகுறித்து நடிகர் சங்க தலைவர் நாசர் நடிகர் சங்கம் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நிதியை தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் சிவகார்த்திகேயன் வழங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்தை விரைவில் கட்டி முடிக்க சங்கத்தினர் மிகுந்த முனைப்பு காட்டி வருகின்றனர். இந்த கட்டடத்திற்கு மறைந்த நடிகர் விஜயகாந்தின் பெயர் வைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து சங்கத்திற்கான நிதியுதவியை நடிகர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு கொடுத்துவரும் சூழலில் விரைவில் சங்கக்கட்டடப் பணிகள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.