திருகோணமலை கண்டி பிரதான வீதியில் பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று இன்று காலை இடம்பெற்றது.

திருகோணமலை கண்டி பிரதான வீதியில் முல்லிப்பொத்தானை 96வது மைல் கல் பாலத்திற்கு அருகில் இன்று அதிகாலை 5.55 மணியளவில் இரு பார ஊர்திகள் ஒன்றுக்கொன்று மோதியதில் குறித்த விபத்தானது இடம்பெற்றுள்ளதாக பிராந்திய செய்தியாளர் அருவிக்கு தெரிவித்தார்.

குறித்த விபத்து தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

சீமெந்து ஏற்றிக்கொண்டு ஒரு திசையிலிருந்து வந்த பார ஊர்தி ஒன்றும் சல்லிக் கற்களை ஏற்றியவாறு மறு திசையிலிருந்து வந்த டிப்பர் ரக வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ் விபத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையில் இருந்து சீமெந்து ஏற்றிச் சென்ற பார ஊர்தியும், மாத்தளையில் இருந்து சல்லிக் கற்களை ஏற்றி வந்த டிப்பர் ரக வாகனமுமே விபத்துக்குள்ளானது.

இதன்போது, சீமெந்து ஏற்றிவந்த பார ஊர்தியின் சாரதி உயிரிழந்துள்ளார்.