நெல்லையில் கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் மருத்துவக்கல்லூரி மாணவிகள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் 4ஆம் ஆண்டு படிக்கும் மாணவிகள் 3 பேர் திருநெல்வேலியில் இருந்து மொபட்டில் ரெட்டியார்பட்டி நான்குவழிச் சாலையில் சென்றுகொண்டிருந்தனர்.

இவர்கள் ரெட்டியார்பட்டி மலை பகுதி அருகே சென்றுகொண்டிருந்தபோது, எதிரே நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி சென்றுகொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்பை உடைத்துக்கொண்டு மொபட்டில் சென்ற மாணவிகள் மீது மோதியது.

இதில், மொபட்டில் பயணம் செய்த தென்காசி மாவட்டம் ஆவுடையானூரைச் சேர்ந்த திவ்ய காயத்ரி (21), மதுரை பரசுராம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரிடா ஏஞ்சலின் ராணி ஆகிய இரு மாணவிகளும் காரில் பயணித்த ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

ஒரு மாணவி மற்றும் காரில் பயணம் செய்த 3 பேர் என மொத்தம் 4 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் 4 பேரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.