எங்களிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது,நாங்கள் நினைத்தால் கூச்சலிடுபவர்களின் அனைத்து உரிமைகளையும் இல்லாமல் செய்யலாம்,நீங்;கள் கேட்பது அதுதான் என்றால் நான் அதனை தருவேன் - கவனமாகயிருங்கள்.

நாடாளுமன்ற சட்டங்களின் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமானவர்களின் சிவில் உரிமைகளை பறிக்க முடியும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச எச்சரித்துள்ளார்.

அந்த குற்;றங்களில் அவர்கள் மீண்டும் ஈடுபடுவதை தடுப்பதற்காக அவசியம் என்றால் எங்களால் நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் தேசியபாதுகாப்பு குறித்து எந்தவித அக்கறையும் கொண்டிருக்கவில்லை என தெரிவித்த அவர்  இறுதியில் அவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்கதவறியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

அவர்கள் புலனாய்வுசேவையை அழித்தனர் யுத்தவீரர்களை சிறையில் அடைத்ததன் மூலம் இராணுவத்தினரின் மனோநிலையை சிதைத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் யார் காரணம் என்பதை தெளிவாக தெரிவிக்கின்றன,ஜனாதிபதி முதல் பிரதமர் வரை முழு அமைச்சரவையும் காரணம் என அந்த ஆணைக்குழுக்கள் தெரிவித்துள்ளன எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ளது உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு காரணமானவர்களின் சிவில் உரிமைகளை இரத்துசெய்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் ஒன்றை எதிர்பார்க்கின்றீர்கள் என்றால்,நீங்கள் எதிர்பார்ப்பது குறித்து அவதானமாகயிருங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.