லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின்போது போராட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்த நிலையில் 32 பேர் காயமடைந்தனர்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற துறைமுக குண்டுவெடிப்பு தொடர்பிலான நீதிபதி விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீதே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

விசாரணைகளை மேற்கொள்ளும் நீதிபதி தாரீக் பித்தரை நீக்குமாறு ஷியா முஸ்லிம் குழுக்களான ஹிஸ்புல்லா இயக்கத்தின் ஆதரவாளர்களும் அரசியல் கட்சியான அமல் இயக்கத்தினரும் கோரிக்கையை வலியுறுத்தியே ஆா்ப்பாட்டம் இடம்பெற்றது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற துறைமுக குண்டுவெடிப்பில் 219 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி பக்கச்சார்பானவர் என்று ஹிஸ்புல்லா மற்றும் அதன் கூட்டாளிகள் கூறுகின்றனர்.

இந்நிலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய தயோனே-பதரோ பகுதியில் பேரணியாகச் சென்றபோது திடீரென கூட்டத்தினரை நோக்கி சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த லெபனான் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட பகுதியை நோக்கி பதில் தாக்குதல் நடத்தினர்.

கிறிஸ்தவ லெபனான் படைகள் கட்சியே இந்தத் தாக்குதலின் பின்னணியில் உள்ளதாக ஷியா முஸ்லீம் குழுக்களான ஹிஸ்புல்லா இயக்கத்தின் ஆதரவாளர்களும் அரசியல் கட்சியான அமல் இயக்கத்தினரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்த வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ள லெபனான் ஆயுதப் படைகளின் தலைவர் சமீர் கெகியா, அனைவரையும் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

தாக்குதல் நடத்தியவர்களைத் தேடும் பணியில் படையினர் களமிறங்கியுள்ளனர். வீதிகளில் துப்பாக்கி ஏந்திய எந்தவொரு வன்முறையாளரையும் கண்டவுடன் சுட உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் அவா் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்றையதினம் நடந்த வன்முறை லெபனானின் மிக மோசமான வன்முறைகளில் ஒன்று என பிரதமர் நஜிப் மிகடி கண்டித்துள்ளார்.

கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் துக்க தினமான அவா் பிரகடனம் செய்துள்ளார்.