கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு வீடுகளில் சிகிச்சை பெற்றுவரும் அரச ஊழியர்களுக்கு அக்ரஹார காப்புறுதி நிதியிலிருந்து இழப்பீடுகளை பெற்றுக் கொடுக்கும் வகையிலான திட்டமொன்றை வகுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (13) பிற்பகல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்கம் மற்;றும் ஒருங்கிணைந்த தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்;துரையாடலின் போதே  பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது அரச சேவையை செயற்திறன் மிக்கதாக மாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து தொழிற்சங்கத்தினர் கௌரவ பிரதமரிடம் எடுத்துரைத்தனர்.

அரச நிறுவனங்களின் செயற்திறன் மற்றும் உற்பத்தி திறனை மேம்படுத்த வேண்டும் என சுட்டிக்காட்டிய பிரதமர், அதற்கு பொறுப்புவாய்ந்த அதிகாரிகளின் செயற்பாடு அவசியம் எனவும் குறிப்பிட்டார்.

அதற்கு அரச ஊழியர்களுக்கான தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான பயிற்சி நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டின் பின்னர் அரச சேவையில் இணைந்து கொண்டவர்கள் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின்போது இழந்த ஓய்வூதிய கொடுப்பனவை மீண்டும் பெற்றுக் கொள்வது தொடர்பில் தொழிற்சங்க பிரதிநிதிகள் இதன்போது கருத்து தெரிவித்தனர்.

இது தொடர்பில் ஆராயுமாறு கௌரவ பிரதமர், அரச சேவைகள் அமைச்சின் செயலாளருக்கு அச்சந்தர்ப்பத்திலேயே தெரிவித்தார். வாழ்க்கை செலவு அதிகரிப்பதற்கு ஏற்ப ஓய்வூதிய கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

புகையிரத திணைக்களத்தின் கொள்முதல்களில் காணப்படும் சில முறைகேடுகள் தொடர்பிலும் இதன்போது தொழிற்சங்க பிரதிநிதிகள் கௌரவ பிரதமருக்கு விளக்கமளித்தனர்.

கொவிட் தொற்று காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இச்சூழலில் அரச நிறுவனங்களின் செலவுகளை மட்டுப்படுத்துவது தொடர்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கௌரவ பிரதமர், புகையிரத திணைக்களத்தினுள் காணப்படும் முறைகேடுகள் தொடர்பில் ஆராயுமாறும் குறிப்பிட்டார்.