பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப் பட்டு சுமார் 6 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க கொழும்பு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டார்.
இது தொடர்பான வழக்கு இன்று (14) நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப் பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதேவேளை, தனது வீட்டில் பணியாற்றி வந்த டயகம சிறுமி மரணித்தமை தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகளுக்காக கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றிலும் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன் போது, குறித்த வழக்கிலும் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ள தாக தெரியவந்துள்ளது.

சிறுமி இஷாலினியின் மரணம் தொடர்பான அடுத்த விசாரணை, 2022 பெப்ரவரி 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.