நடிகை பியூமி ஹன்சமாலிக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவத்தை அடுத்து பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர பதவியில் இருந்து விலகுமாறு கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.

நடிகை பியூமி ஹன்சமாலிக்கு வழங்கிய தனிமைப்படுத்தல் உத்தரவில் அமைச்சர் தலையிட்டதாகக் கூறப்படுவதால் அமைச்சர் தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என்று ஆளும் கட்சிக்குள் உள்ள பல எம்.பி.க்கள் கருதுகின்றனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

தனிமைப்படுத்தல் மற்றும் பயணக்கட்டுப்பாட்டு சட்டங்களை மீறி அழகுக்கலை நிபுணரான சந்திமால் ஜயசிங்க கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் பங்கேற்ற நடிகை பியூமி ஹன்சமாலி உட்பட 15 பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இதன்போது மாற்று ஆடையில்லை என பியூமி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதையடுத்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர அவருக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்திருந்தார்.

பியுமி ஹன்சமாலியின் தொலைபேசிக்கு அழைப்பெடுத்து அவரது கவலையை கேட்டறிந்து, பஸ்ஸிற்குப் பொறுப்பாக இருந்த உதவி பொலிஸ் அதிகாரிக்கு கூறி கொஸ்வத்த பிரதேசத்தில் பஸ்ஸினை நிறுத்தும் படியும் உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது.

அந்த சந்தர்ப்பத்தில் அவர்களது உறவினர்களிடம் கூறி தனிமைப்படுத்தலில் ஈடுபடும் காலத்தில் பயன்படுத்த ஆடைகளை அவர்கள் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தனிமைப்படுத்தப்பட்ட வசதிக்கு புறப்படுவதற்கு முன்னர் நடிகை தனது வீட்டிலிருந்து சில துணிகளைப் பெற உதவுவதில் மட்டுமே தலையிட்டதாக அமைச்சர் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

இதையடுத்தே அமைச்சர் தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என்று ஆளும் கட்சிக்குள் உள்ள பல எம்.பி.க்கள் கருதுகின்றனர் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.