இலங்கை

இந்தியா மற்றும் இலங்கை இடையே நில வழித்தடத்தை அமைப்பது தொடர்பில்  இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா விவரித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவுடனான இலங்கை - இந்திய சங்கத்தின் வருடாந்த இரவு விருந்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

புதுடில்லி அண்மைய காலமாக முன்னெடுத்துள்ள அரசியல் நகர்வுகளை சுட்டிக்காட்டிய அவர் , காற்று, கடல், வர்த்தகம், டிஜிட்டல், ஆற்றல் மற்றும் மக்களுக்கு இடையிலான இணைப்பு குறித்தும் சுட்டிக்காட்டியிருந்தார்.

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையேயான விமான சேவைகள் மற்றும் இந்தியாவிற்கும் வட இலங்கைக்கும் இடையில் படகு சேவைகளை ஆரம்பிப்பது குறித்தும் கூறியுள்ளார்.

அதேசமயம் இந்தியா-இலங்கை நில இணைப்பு வழித்தடமாக இருக்க வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுபடுத்த முடியும் எனவும், மக்களின் வளர்ச்சி மற்றும் செழுமையின் புதிய சகாப்தமாக மாறும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கூறியுள்ளார்.

இதேவேளை, தமிழ்நாட்டின் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாரை இணைக்கும் 23 கிலோமீட்டர் நீளமான பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வை இந்திய அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே பாலம் அமைப்பதற்கான முன்மொழிவு இரண்டு தசாப்தங்களாக விவாதத்திற்கு உட்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பதன் மூலம் தமது நாட்டின் "இறையாண்மை அழிக்கப்படும்" என சிங்கள ஆதிக்க வெறியர்கள் கூறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.