ஜனாதிபதி தேர்தலில் தோற்றால் அது இரத்தக்களறியை ஏற்படுத்தும் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சர்ச்சை கருத்தினை வெளியிட்டுள்ளார்.

ஓஹியோ மாகாணத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலேயே டொனால்ட் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்பட்ட கார்களிற்கு 100 வீத வரியை விதிப்போம் என தெரிவித்துள்ள டிரம்ப் நான் தெரிவு செய்யப்பட்டால் அந்த வெளிநாட்டு கார்களை விற்கமுடியாத நிலையேற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையிலேயே ஓஹியோ மாகாணத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய டொனால்ட் ட்ரம்ப் தன்னை ஜனாதிபதியாக தேர்வு செய்யா விட்டால் இரத்தக்களறி ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.

டிரம்பின் இந்த கருத்து அவர் மற்றுமொரு ஜனவரி ஆறாம் திகதியை விரும்புகின்றார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது என ஜனாதிபதி ஜோ பைடனின் பிரச்சார பிரிவின் பேச்சாளர் ஜேம்ஸ் சிங்கெர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மக்கள் டிரம்பின் தீவிரபோக்கினை தொடர்ந்து நிராகரித்துவருவதால் நவம்பர் தேர்தலில் அவர்கள் அவரை நிராகரிக்கப்போகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் அமெரிக்க மக்கள் அவரின் வன்முறை மீதான விருப்பம் பழிவாங்கும் குணம் ஆகியவற்றை நிராகரிக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.