இந்தியா: தமிழ்நாடு

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையும், தொகுதி பங்கீடு ஆலோசனைகளும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நேற்று கிருஷ்ணகிரியில் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது...

பாஜகவுடன் அதிமுக மறைமுக கூட்டணியில் இருப்பதாக சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். நான் ஏற்கனவே பலமுறை சொல்லிவிட்டேன். அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என்று அறிவித்து விட்டோம்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இல்லை. அதற்குப் பிறகு கடந்த 5 மாதங்களாக, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தவறான அவதூறான தகவல்களைப் பேசி வருகிறார்கள். இன்று மீண்டும் ஒருமுறை உறுதியாகச் சொல்கிறேன். அதிமுக, பாஜக கூட்டணியில் இல்லவே இல்லை. இனிமேல் ஊடக நண்பர்கள் இது தொடர்பான எந்தக் கேள்வியும் எழுப்ப வேண்டாம். எந்த ரகசிய பேச்சுவார்த்தையும் கிடையாது. லோக்சபா தேர்தலுக்கு எந்த நேரத்தில் அதிமுக கூட்டணி அமைக்க வேண்டுமோ, அந்த நேரத்தில் சரியான கூட்டணி அமையும்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.