பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான், பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார். தன்னுடைய பதவிக் காலத்தில் தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகிய இருவரும் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பின், கடந்த 2022 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் தோல்வியடைந்த இம்ரான்கான் தனது பிரதமர் பதவியை இழந்தார்.

இதனையடுத்து, அல்-காதிர் அறக்கட்டளை முறைகேடு மற்றும் பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசியத் தகவல்களைக் கசியவிட்ட சிபர் வழக்கு எனப் பல்வேறு வழக்குகள் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் இம்ரான்கானுக்கு எதிராகத் தொடரப்பட்டது. பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசிய தகவல்களை கசியவிட்டதாகக் கூறி தொடரப்பட்ட ‘சிபர்’ வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  இந்த நிலையில் ‘சிபர்’ வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த ஆண்டு இம்ரான்கானிற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதனைத் தொடர்ந்து, பரிசுப் பொருட்கள் ஊழல் வழக்கில் மேலும் 14 ஆண்டுகள், இஸ்லாம் மார்க்கத்துக்கு எதிராக திருமணம் செய்ததாக 7 ஆண்டுகள், கூடுதல் ஒரு வழக்கு என 4 வழக்குகளில் 34 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இம்ரான் கானும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷியும் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பிபிக்கு இரு வழக்குகளின் கீழ் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தற்போது அவர் இம்ரான் கானின் இல்லத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். 

அடியாலா சிறையில் இருக்கும் இம்ரான் கானுக்கும், குரேஷிக்கும் உயர்மட்ட கைதிகள் என்கிற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அதாவது சாதாரண கைதிகளை போல் இல்லாமல் சிறையில் அவர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இருவரும் தங்களுக்கு தேவையான உணவை தாங்களே தயாரித்து சாப்பிட அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், உயர்மட்ட கைதிகளாக அந்தஸ்து வழங்கப்பட்ட போதிலும், இம்ரான் கானும், குரேஷியும் சிறை வளாகத்தில் உள்ள பணிகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என சிறை நிர்வாகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இருப்பினும், இருவரும் எந்த மாதிரியான பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளனர் என்கிற தகவல் வெளியாகவில்லை.