கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்று சுகாதார அமைச்சின் சுற்று நிருபத்துக்கமைய இன்று வெள்ளிக்கிழமை முதலாவது சடலம் ஓட்டமாவடி மஜ்மா நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மா நகரில் கொரோனா தொற்று மூலம் மரணித்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு சிபார்சு வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி வரை இரண்டு சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டது.

அதேவேளை இன்று வெள்ளிக்கிழமை கொரோனா தொற்று மூலம் மரணித்த ஐந்து முஸ்லிம்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்படவுள்ளது. அந்த வகையில் ஏறாவூர் பிரதேசத்தை சேர்ந்த இரு சடலங்களும், காத்தான்குடியில் உள்ள மூன்று சடலங்களுமாக ஐந்து சடலங்கள் அடக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி ,மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் காணிகளை அண்மித்த இடங்களின் இராணுவத்தினர் பலத்த பாதுகாப்புடன் செயற்படுவதுடன், அனுமதி இல்லாதவர்கள் மற்றும் ஊடவியலாளர்கள் ஆகியோர் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சடலம் அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ,கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் உடல்களை குறித்த காணியில் அடக்கம் செய்வதற்காக வெக்கோ வாகனங்கள் மூலம் குழிகள் தோண்டும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன், ஆறு அடி ஆழம், ஆறு அடி நீளம், மூன்று அடி அகலம் என்பவற்றில் குழிகள் தோண்டப்பட்டுள்ளதுடன், ஒவ்வொரு குழிகளுக்கும் மூன்று அடி இடைவெளியில் தோண்டப்பட்டுள்ளது.

இதனை மட்டக்களப்பு மாவட்ட சுகாதார பிராந்திய பணிமணை அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள், ஓட்டமாவடி பிரதேச செயலக அதிகாரிகள், ஓட்டமாவடி பிரதேச சபை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.