இந்தியா: தமிழ்நாடு...!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். இருப்பினும் அவ்வப்போது முகநூல் பக்கத்தில் அதிமுக நிலை குறித்து பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று கூறி பூங்குன்றன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்....

நீங்கள் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என்று தொண்டர்கள் காத்துக் கொண்டு இருந்தார்கள். இன்று நீங்கள் ஒற்றுமையாக இருந்தால் நன்றாக இருக்குமே என்று மக்களும் பரிதாபப்படுகிறார்கள்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிலை கண்டு ஒரு பக்கம் சிரிக்கிறார்கள். ஒரு பக்கம் அழுகிறார்கள். தலைவர்கள் அணிந்திருக்கும் ஈகோவை கழட்டிவிட்டால் நன்றாக இருக்குமே என்று எல்லோரும் ஆதங்கப்படுகிறார்கள். தொலைநோக்கு பார்வை உங்களுக்கு வேண்டும். அதுவே கழகத்தின் வெற்றிக்கு வழி.

எங்கு பார்த்தாலும் அதிமுகவின் நிலையைப் பார்த்து எல்லோரும் வேதனைப்படுகிறார்கள். பேனாவை பேசிக் கொண்டிருந்த உள்ளங்கள் இன்று இரு இலையை பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. இப்படித்தான் ஒரு டீக்கடையில் சிலர் பேசிக் கொண்டிருக்கும் போது, என் துரதிஷ்டம் நானும் அங்கே நின்று கொண்டிருந்தேன்.

அரசியலில் ஆர்வம் இல்லாதவர்கள் என்பது புரிந்தது. அவர்களில் ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார். தலைவர் காலத்திலிருந்து அவர் இரட்டை இலையின் தீவிர விசுவாசி.

அவர் வீட்டில் எப்போதும் அதிமுகவின் கொடி பறந்து கொண்டிருக்கும். பேச்சிலும், மூச்சிலும் அவர் அம்மாவையும், புரட்சித்தலைவரையும் புகழ்ந்து கொண்டிருப்பார். ஆனால் இப்போது அவர் வீட்டில் பறந்துகொண்டிருந்த கொடியை கழட்டி வைத்துவிட்டு எந்த பக்கமும் இல்லாமல் அமைதி காக்கத் தொடங்கிவிட்டார்.

எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று சொன்னார். அதைக் கேட்ட போது மனம் எனக்கு வலிக்கவே செய்தது.

வேறு எங்கும் செல்ல மனம் இல்லாமல் பலர் ஒதுங்கிவிட்டார்கள். இது உங்களுக்கு புரிகிறதா? இல்லையா? என்று எனக்குப் புரியவில்லை. நல்லதை எடுத்துச் சொல்ல நிர்வாகிகளுக்கு அச்சம். தயவுசெய்து நிர்வாகிகளே! எது கட்சிக்கு நல்லதென்று உங்கள் மனதிற்கு தெரியும். அதை வெளிப்படையாக பேசுங்கள்.

பதவிக்காக கட்சியை அடமானம் வைத்து விடாதீர்கள். என்னைப் பொருத்தவரை இரட்டை இலை சின்னம் முடக்கப்படக்கூடாது என்பதே! தொண்டர்களின் எண்ணமும் அதுவே! உண்மை கசக்கும், அதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் மக்களும், தொண்டர்களும் எதை விரும்புகிறார்களோ அதை ஏற்றுக் கொண்டு, விட்டுக்கொடுத்து வாழத் தொடங்குங்கள். வரலாறு உங்களை நினைவில் வைத்திருக்கும் என பூங்குன்றன் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.