ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (UNP) உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பொது சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பரிசீலித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இரண்டு கட்சிகளும் சில உள்ளூராட்சி மன்றங்களில் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும், சில உள்ளூராட்சி மன்றங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக ரங்கே பண்டார தெரிவித்ததாக லங்காதீப தெரிவித்துள்ளது.

தேர்தலின் போது சில உள்ளுராட்சி மன்றங்களில் இரு கட்சிகளும் பொது சின்னத்தையே பயன்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு உள்ளூராட்சி சபைக்கும் போட்டியிடும் கட்சி சின்னங்களை தீர்மானிப்பது தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கு இடையில் நாளை கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், அங்கு போட்டியிடுவதற்கான நடைமுறை மற்றும் பொது சின்னம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

ருவன் விஜேவர்தன, அகில விராஜ் காரியவசம், வஜிர அபேவர்தன, சாகல ரத்நாயக்க, பாலித ரங்கே பண்டார, மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோர் இந்த வகலந்துரையாடலில் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பசில் ராஜபக்ஷ, சாகர காரியவசம், சஞ்சீவ எதிரிமான்ன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.