2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மின் பயனாளர்களிடம் சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரியை அறவிட இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.

பொது பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரி மின் பயனாளர்களுக்கு அறவிடப்படுவதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் அடிப்படையில் மின்சார கட்டணத்திற்கு சமூக பாதுகாப்பு ஒத்துழைப்பு வரியினை அறவிடாமல் விலக்களிக்குமாறு நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்தோம்.

எனினும் குறித்த வரிக்கு அனைத்து நிறுவனங்களும் உள்வாங்கப்பட்டிருப்பதால் விலக்களிப்பு செய்ய முடியாது என நிதி அமைச்சு பதிலளித்துள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஆகையினால் ஒக்டோபர் முதலாம் முதல் அனைத்து மின் பயனாளர்களிடம் குறித்த வரியானது அறவிடப்படும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.