துபாய் விமான நிலையத்தில் இரண்டு பயணியர் விமானம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாக இருந்த சம்பவம் கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது.

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் இருந்து தெலுங்கானாவின் ஹைதராபாத் நோக்கி, 'எமிரேட்ஸ் இகே - 524' ரக பயணியர் விமானம் கடந்த 9 ஆம் திகதி இரவு புறப்படத் தயாரானது.

அதே நேரத்தில் துபாய் - பெங்களூரு இடையிலான 'எமிரேட்ஸ் இகே - 568' ரக விமானமும் புறப்பட தயாரானது.

இந்த இரண்டு விமானங்களும் 5 நிமிட இடைவெளியில் புறப்படுவது வழக்கம்.

துபாய் - ஹைதராபாத் விமானம் புறப்படுவதற்காக ஓடுதளத்தில் அதிவேகமாக வந்த போது, எதிரில் துபாய் - பெங்களூரு விமானம் புறப்பட தயாராகி வந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் உடனடியாக  கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் துபாய் - ஹைதராபாத் விமானத்தின் புறப்பாடை நிறுத்தும்படி உத்தரவிட்டனர்.

இதையடுத்து அந்த விமானம் ஓடுதளத்தை விட்டு பாதுகாப்பாக வெளியேறி மற்றொரு விமானத்துக்கு வழிவிட்டது.

இதனையடுத்து அந்த ஓடுதளத்தில் இருந்து துபாய் - பெங்களூரு விமானம் புறப்பட்டுச் சென்றது.

கடைசி நேர எச்சரிக்கையால் மிகப் பெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ஹைதராபாத் புறப்பட இருந்த விமானம் ஒப்புதல் கிடைக்கும் முன்னரே புறப்பட தயாரானமையே இந்த குழப்பத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.