பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்குக்கு சில மணி நேரங்கள் முன்னதாக, பிரதமர் போரிஸ் ஜான்சனின் அலுவலக நிர்வாகிகள் மது விருந்து நடத்தியது குறித்த செய்தி அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் 2020ல் கொரோனா முதல் அலையின் போது கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 

இந்நிலையில் 2020 மே மாதம், லண்டனின் 10, டவுனிங் தெருவில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் மிகப் பெரிய மது விருந்தை போரிஸ் ஜான்சன் நடத்தியதும் அதில் 100க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்றதும் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது.

மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன் போரிஸ் ஜான்சனின் பொறுப்பற்ற செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து தன் தவறுக்கு போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கோரினார்.

இந்த பிரச்னையே இன்னும் முடிவுக்கு வராத நிலையில் பிரதமர் போரிஸ் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ராணி எலிசபெத்தின் கணவர் பிலிப் அவர்களின் இறுதி சடங்கு நடப்பதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக, போரிஸ் ஜான்சன் அலுவலக நிர்வாகிகளுடன் மது விருந்து நடத்தியதாக பிரிட்டன் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

மது விருந்து நடத்தி சர்ச்சையில் சிக்கியுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனை, சொந்த கட்சியினரே பதவி விலகும்படி வலியுறுத்தி வருகின்றனர்.

அவர் பதவி விலகினால் அடுத்த பிரதமராக பொறுப்பேற்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.