தமிழகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் கொரோனா பரவலை  கட்டுப்படுத்தும் வகையிலும், ‘ஒமைக்ரான்’ சமூக பரவல் ஆகிவிடக்கூடாது என்பதற்காகவும் தமிழக அரசின் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கிறது.

அதன்படி தமிழகத்தில் கடந்த 6 ஆம் திகதி முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது.

இந்நிலையில் இன்று காய்கறி, இறைச்சி கடைகள், ஜவுளி, நகை கடைகள், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் திறக்கப்படவில்லை.

மதுபான கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரெயில் சேவை இயங்காது. ஆனால் மின்சார ரெயில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் இயங்குகின்றன.

ரெயில், விமான பயணிகள் சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் பொலிஸாரின் வாகன சோதனையின்போது பயணச்சீட்டை காண்பிக்க வேண்டும்.

முழு ஊரடங்கையொட்டி தமிழகம் முழுவதும் 60 ஆயிரம் பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

இதனிடையே சென்னையில் 312 இடங்களில் தடுப்புகள் அமைத்து பொலிஸார் வாகன சோதனை மேற்கொள்ள இருக்கின்றனர்.

முக்கிய மேம்பாலங்கள் தவிர்த்து அனைத்து மேம்பாலங்களும் அடைக்கப்படும், போக்குவரத்து சிக்னல்களும் நிறுத்தப்படும்.

எனவே முழு ஊரடங்கான இன்று அவசிய தேவை இல்லாமல் வாகனங்களில் வெளியில் சென்றால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

ஊரடங்கு காரணமாக வாகன போக்குவரத்து கணிசமாக குறைந்து விட்டது. சென்னை உட்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள பிரதான சாலைகளும் ஆரவாரம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.