பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமர் மோடி பஞ்சாபில் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஃபெராஸ்பூரில் நடைபெற இருந்த  நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று 42,750 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்காக நேற்றைய தினம் காலை பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஹெலிகாப்டர் வாயிலாக செல்ல இருந்தார். ஆனால், மோசமான வானிலை கரணமாக மோடியின் ஹெலிகாப்டர் பயணம் இரத்து செய்யப்பட்டு சாலை மார்க்கமாக செல்ல திட்டமிடப்பட்டது.

ஆனால்,போரட்டம் காரணமாக சாலை மறிக்கப்பட்டிருந்ததால் பதிண்டா என்ற இடத்தில் மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் வாகன கன்வாய் 15- 20 நிமிடங்கள் நின்றது.

பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய குளறுபடி நடைபெற்றதையடுத்து அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டதுடன் உடனடியாக பதிண்டா விமான நிலையத்திற்கே பிரதமர் மோடி திரும்பிச்சென்றார்.

இது குறித்து உள்துறை அமைச்சகம் கூறும் போது, “ பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட இந்த குளறுபடியை கவனத்தில் எடுத்துள்ளோம். இவ்விவகாரம் குறித்து பஞ்சாப் அரசிடம் விரிவான விளக்கம் கேட்கப்படும். மாற்று பயண திட்டமாக சாலை வழியாக செல்ல நேரும் போது பஞ்சாப் அரசு கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால், பஞ்சாப் அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை.பாதுகாப்பில் ஏற்பட்ட குளறுபடி  காரணமாக  விளக்கம் கேட்டுள்ளோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று பிரதமர் மோடி பஞ்சாப் பயணம் மேற்கொண்டு  இருந்த நிலையில், பாதுகாப்பு ஏற்பாட்டில் குளறுபடி ஏற்பட்டதால் பிரதமர் மோடியின் பயணம் இரத்தாகிய சம்பவம் அரசியல் ரீதியாகவும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.