ஆப்கானிஸ்தானில் கடைகளில் வைக்கப்படும் பெண் பொம்மைகளுக்கு தலை இருக்கக் கூடாது, எல்லாவற்றையும் வெட்ட வேண்டும் என்று தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளனர்.

தலிபான்கள் வந்தது முதல் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை மக்களுக்கு விதித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பிளாஸ்டிக் பொம்மைகளின் தலை மீது கை வைத்துள்ளது தலிபான் அரசு.

அதாவது ஆடை கடைகளில் ஆளுயர இருக்கும் பொம்மைகளுக்கு தலை இருக்கக் கூடாது என்று தற்போது தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுபோல தலையுடன் கூடிய பொம்மைகள் வைப்பது இஸ்லாமிய வழக்கத்திற்கு எதிரானது. எனவே தலையில்லாமல்தான் பொம்மைகள் இருக்க வேண்டும் என்று இவ்வாறு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளனர்

இதையடுத்து தற்போது தலையுடன் கூடிய பொம்மைகள் அனைத்துக்கும் தலையை வெட்டி வருகின்றனர் கடைக்காரர்கள்.

ஹெராட் நகரில் ஒரு இடத்தில் மொத்தமாக பொம்மைகளை படுக்க வைத்து தலையை ரம்பத்தால் அறுக்கும் காணொலி வெளியாகி வைரல் ஆகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் கலாச்சார தலைநகராக கருதப்படுவது ஹெராட் என்பது நினைவிருக்கலாம்.

கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றினர். அப்போது முதல் அடுத்தடுத்து கட்டுப்பாடுகளைப் போட்டபடி உள்ளனர். பேச்சு சுதந்திரம் உள்ளிட்டவையும் அங்கு பறிக்கப்பட்டுள்ளது. பெண்கள், சிறார்களின் உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளது.

அங்கு இசைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மது விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது. இப்போது பொம்மைகளையும் அவர்கள் விடவில்லை.