சீனாவின் உகான் நகரில் கடந்த  2019 ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா  இன்னும் உலக நாடுகளை விழி பிதுங்க வைத்து வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள் முழு வீச்சில் தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், உருமாற்றம் அடைந்து வரும் கொரோனா ஆட்டம் காட்டி வருகிறது.

டெல்டா, ஆல்பா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான் ஆகிய திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஒமைக்ரான் பரவல் காரணமாக தற்போது தொற்று பாதிப்பு உலக நாடுகளில் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.

இதனால், மீண்டும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தப்பட்டு வருகின்றன. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரான்சில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இது 46 உருமாற்றங்களை கொண்டுள்ளதாகவும், 12 பேர் இதுவரை பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மத்திய ஆப்ரிக்க நாடான கேமரூனில் இருந்து வந்த பயணிக்கு முதன்முறையாக இந்த உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என 12 பேருக்கு இந்த வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது ஒமைக்ரானை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

ஐஎச்யு பி.1.640.2 என  புதிய திரிபு கொரோனாவுக்கு பெயரிட்டுள்ளனர். எனினும், இதுவரை  உலக சுகாதார அமைப்பு  இது குறித்து எந்த கருத்தையும் வெளியிடவில்லை.