பயங்கரவாதிகள் ராணுவ வாகனத்தின் மீது ராக்கெட் குண்டை வீசியதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர்.

சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடந்த 2019 ஆம் ஆண்டு முழுமையாக ஒடுக்கப்பட்டு, அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பகுதிகளும் மீட்கப்பட்டன.

எனினும் சமீபகாலமாக சிரியாவின் தெற்கு மற்றும் மத்திய பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கை மீண்டும் ஓங்கி வருகிறது.

அவர்கள் அங்கு இராணுவ வீரர்கள் மற்றும் பொலிஸாரை குறிவைத்து தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்நிலையில் சிரியாவின் மத்திய பகுதியில் உள்ள பாலைவன நகரமான பல்மைராவில் இருந்து 20 இற்கு மேற்பட்ட இராணுவ வீரர்கள் ராணுவ வாகனத்தில் புறப்பட்டனர்.

அங்குள்ள ஒரு நெடுஞ்சாலையில் பயணித்த போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் இராணுவ வாகனத்தின் மீது ராக்கெட் குண்டை வீசினர்.

இதில் பஸ் வெடித்து சிதறியது. இந்த கோர சம்பவத்தில் 5 இராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்ததுடன் 15 பேர் பலத்த காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.