எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆரம்ப பிரிவு பாடசாலைகளில் மாணவர்களை இரண்டு பிரிவுகளாக பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நேற்று நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் மாணவர்கள் மத்தியில் தனிப்பட்ட இடைவெளியை முன்னெடுப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.

மாணவர்களின் நலன்கருதியே முறையான திட்டமிடலுக்கு அமைவாகவே, ஜனவரி மாதம் 11ஆம் திகதி பாடசாலைகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இது உடனடியாக எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல என்றும் கூறினார்.

விசேட வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளும் இதற்காக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. குறுகிய அரசியல் நோக்கில் இதுபற்றி கவனம் செலுத்தக்கூடாது பாடசாலைகளை திறக்குமாறு பெற்றோர் நாளாந்தம் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். பாடசாலைகளுக்கான சுகாதார உபகரணங்களை வழங்குவதற்கென அரசாங்கம் ஆயிரத்து 50 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.