வன்முறை போராட்டங்களால் தென் ஆப்பிரிக்காவில் பலியானவர்கள் எண்ணிக்கை 212 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அந்த நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் 15 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதையடுத்து ஜேக்கப் ஜூமாவை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் கடந்த வாரம் ஜேக்கப் ஜூமா போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் ஜேக்கப் ஜூமாவை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.‌ தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு பிராந்திய பகுதிகளில் இந்த வன்முறை போராட்டம் நடைபெற்று வருகிறது. வன்முறையை ஒடுக்க ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, வன்முறை போராட்டங்களால் தென் ஆப்பிரிக்காவில் பலியானவர்கள் எண்ணிக்கை 212ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கலவர பகுதிகளில்  தேசிய பாதுகாப்பு படையினர் சுமார் 25 ஆயிரம் பேர் குவிக்கப்பட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.