கொரோனா நோயாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் பூர்த்தியாகாத நிலையிலேயே கொழும்பின் ஆறு தொடர்மாடி குடியிருப்புகளின் தனிமைப்படுத்தல் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

நேற்று தனிமைப்படுத்தல் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட வீடமைப்பு தொகுதிகள் குறித்தே அரச மருத்துவ அதிகாரிகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கே இதனை தெரிவித்துள்ளார்


குறிப்பிட்ட வீடமைப்பு தொகுதிகளில் வாழும் ஏனைய மக்கள் தங்கள் நாளாந்த நடவடிக்கையைமுன்னெடுப்பதற்கான வாய்ப்பை வழங்குவதற்காகவே தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

 

குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து நோயாளிகளையும் அடையாளம் காண்பதற்கு பல நாட்களாகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் அந்த வீடமைப்பு தொகுதிகளில் வாழ்பவர்கள் மேலும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.வீடமைப்பு தொகுதிகளில் வாழ்பவர்கள் சுகாதாரவிதிமுறைகளை பின்பற்றவேண்டும்,அவசிய தேவைகளுக்காக மாத்திரம் வீடுகளில் இருந்து வெளியே செல்லவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.