இந்தியா: தமிழ்நாடு

நீலகிரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் த.லோகேஷ் தமிழ்செல்வனுக்கு ஆதரவாக உதகை, கோவை மாவட்டம் காரமடை ஆகிய இடங்களில் அதிமுக பொது செயலாளர் பழனிசாமி நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது...

திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் போதைப் பொருட்களின் விற்பனை அதிகரித்திருக்கிறது. போதைப் பொருட்களை விற்பனை செய்வதே திமு‌க நிர்வாகிகள்தான்.

போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் முக்கிய நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்வர் மற்றும் அவரது மகன் ஆகியோருடன் அந்த நபர் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். போதைப் பொருள் கடத்தல் நபருடன் நெருக்கமாக உள்ள உதயநிதி விரைவில் சிறைக்கு செல்வார். அது தேர்தல் நடப்பதற்குள்ளேயே நடக்கும்.

அதிமுக ஆட்சியைப் பார்த்து இருண்ட ஆட்சி என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். திமுகவின் 3 ஆண்டு கால ஆட்சி மக்கள் விரோத ஆட்சி. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.

2010-ல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. அப்போது காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்தது திமுக. இந்த மக்களவைத் தேர்தல், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இருக்க வேண்டும். அதிமுகவை முடக்க சதி செய்ய முன்பு எட்டப்பர்கள் இருந்தார்கள். இன்று அவர்கள் முகவரி தெரியாமல் போய்விட்டனர்.
இவ்வாறு அவர் பேசினார்.