இந்தியா: தமிழ்நாடு

சென்னை மாநகருக்குட்பட்ட மத்திய சென்னை தொகுதியில் மக்களவை தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.கார்த்திகேயன் சிந்தாதிரிப்பேட்டையில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரச்சாரத்தில் பங்கேற்று வாக்கு சேகரித்தார்.

இந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசியதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வராக எப்போது பொறுப்பேற்றுக் கொண்டாரோ அன்றில் இருந்து அநாகரீக அரசியல், ஊழல், சூழ்ச்சி அரசியல் போன்றவை தமிழகத்தில் ஆரம்பமாகிவிட்டன. அன்றில் இருந்து ஊழல், லஞ்சம் தேசியமயமாக்கப்பட்டது. ஓட்டுக்கு காசு கொடுப்பதை ஒரு வாழ்க்கை முறையாக மரபாக்கியதும் இவர்கள் தான்.

எந்த திட்டத்துக்கும் காசு இல்லை, நிதி இல்லை என்று கைவிரிக்கும் திமுக அரசு, ஓட்டுக்காக மட்டும் எப்படி செலவு செய்கிறது? இவர்களுக்கு இடையே மண்ணுக்கும், மக்களுக்குமான அரசியலை முன்வைக்கிறது நாம் தமிழர் கட்சி. நாங்கள் வாக்கை கேட்டு மக்கள் முன்வந்து நிற்கவில்லை.

வருங்கால தலைமுறை பிள்ளைகளின் வாழ்க்கையை கேட்டு வந்து நிற்கிறோம். எங்களுக்கு முதன்மையானது ஓட்டு அல்ல. நாட்டின் உரிமை, மக்களின் நலனை காக்கவே தேர்தலில் நிற்கிறோம். இவற்றை மக்கள் உணர்ந்தாலே போதுமானது. பலமுறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளோம். ஆனால் துவண்டு விடவில்லை. வாக்கு என்பது வலிமைமிக்க ஆயுதம். இதனை அநீதிக்கு எதிராக உபயோகிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.