இலங்கை

சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சீனத் தலைநகர் பீஜிங்கை சென்றடைந்துள்ளார்.

பீஜிங்கில் அவர் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் லீ கியாங் மற்றும் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் சீன கம்யூனிஸ கட்சியின் (CPC) உயர் அதிகாரிகளை சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஹைனானில் உள்ள போவாவில் நடைபெறும் சீனாவின் முதன்மையான வருடாந்த சர்வதேச மாநாட்டில் பிரதமர் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார். போவா மாநாட்டின் கருப்பொருள், ’ஆசியாவும் உலகமும்: பொதுவான சவால்கள், பகிரப்பட்ட பொறுப்புகள்’ என்பதாகும்.

இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர். பெய்ஜிங்கில், பிரதமர் தினேஷ் குணவர்தன முதலில் பிரதமர் லீ கியாங் மற்றும் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அடுத்து 3ஆவது உயர் நிலை அதிகாரியான சீன கம்யூனிச கட்சியின் தேசிய மக்கள் காங்கிரஸின் தலைவர், ஜாவோ லீஜி ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விரிவாக கலந்துரையாடவுள்ளார்.

அவர் சீன துறைமுக தலைமையகம், ஹுவாவீ, சோங்குவான்கன் சூழல் பாதுகாப்பு பூங்கா, பெய்ஜிங்கில் உள்ள தேசிய செயற்கைக்கோள் வானிலை மையம் மற்றும் ஹைனானில் உள்ள வெப்பமண்டல விஞ்ஞான ஆய்வுமையம் ஆகியவற்றிற்கும் விஜயம் செய்யவுள்ளார்.

மேலும். ஷாங்காயில், ஷாங்காய் அதிகாரிகளுடனான சந்திப்புகளுக்கு மேலதிகமாக, அலிபே, சிட்ரிப், டில்மா டீ மற்றும் யுனிவர்சல் எனர்ஜி ஆகிய நிறுவனங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.