இந்தியா: தமிழ்நாடு

மருது சேனை அமைப்பின் தலைவர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

மருது சேனை அமைப்பின் தலைவர் ஆதி நாராயணன். கடந்த சட்டமன்ற தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் அமமுக கூட்டணியில் ஆதிநாராயணன் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு மருது சேனை அமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகிலுள்ள மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். நேற்று மதியம் தனது அலுவலகத்தில் இருந்து கள்ளிக்குடி - விருதுநகர் நான்கு வழி சாலையிலுள்ள மையிட்டான்பட்டிக்கு காரில் புறப்பட்டு சென்றுக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென எதிர் திசையில் வேகமாக வந்த கார் ஒன்று ஆதிநாராயணன் கார் மீது மோதி பெட்ரோல் குண்டை வீசி மர்ம தாக்குதல் நடத்தியது. கார் ஓட்டுநரின் சமார்த்தியத்தால் ஆதிநாராயணன் உயிர் தப்பினார்.

இதுத்தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மருதுசேனை கட்சியின் நிறுவனர் திரு. ஆதிநாராயணன் அவர்களின் வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு பெட்ரோல் குண்டு வீசி கொலைமுயற்சித் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவத்திற்கு என்னுடைய கடும் கண்டனங்கள்.

இந்த விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறி, அதனால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு வருவதை நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி கண்டித்து வரும் நிலையில், தற்போது துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு கலாச்சாரமும் தமிழ்நாட்டில் தலைதூக்கியிருப்பது வருத்தத்திற்கும் கடும் கண்டனத்திற்கும் உரியது.

சவக்குழிக்கே சென்றுவிட்ட தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை உடனடியாக மீட்டெடுத்து, சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்ய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்த விடியா அரசின் பொம்மை முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.