இந்தியா: தமிழ்நாடு

“பாஜக ஆட்சி இந்தியாவின் மதச்சார்பின்மை தன்மையைச் சீர்குலைத்து இஸ்லாமிய சமூகத்தவருக்கு எதிரான பாகுபாட்டை ஊக்குவித்து வருகிறது. பாஜகவிடமிருந்து இந்தியாவின் பன்முக ஆன்மாவை மீட்க ஒன்றிணைவோம்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்லாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான பன்னாட்டு நாளில் அவர் இக்கருத்தினை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் பகிர்ந்துள்ள சமூக வலைதளப் பதிவில், “2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதலே, ஒன்றிய பாஜக ஆட்சி இந்தியாவின் மதச்சார்பின்மைத் தன்மையைச் சீர்குலைத்து, சகிப்பின்மையை வளர்த்து, நமது இஸ்லாமிய சமூகத்தவருக்கு எதிரான பாகுபாட்டை ஊக்குவித்து வருகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் வழியாக இஸ்லாமியர் மீதான வெறுப்பைச் சட்டப்பூர்வமாக்க வழிவகுக்கிறது.

இஸ்லாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான பன்னாட்டு நாளில், பாஜக ஆட்சியின் வகுப்புவாத பாசிசத்தை வேரறுத்து, அவர்களின் பிடியில் இருந்து இந்தியாவின் பரந்துபட்ட பன்முக ஆன்மாவை மீட்க ஒன்றிணைய உறுதியேற்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.