கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் திகதி உயிரிழந்த நிலையில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் திரண்டு வந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தியது. விஜயகாந்த் மறைவின் போது வர முடியாத சிலர், புத்தாண்டு கொண்டாட்டங்கள் முடிந்து சென்னை திரும்பிய நிலையில் தொடர்ந்து விஜயகாந்த் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி, விஷால், ஆர்யா உள்ளிட்ட பலர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வரும் காட்சிகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் தனது அம்மாவுடன் நடிகர் ராகவா லாரன்ஸ் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் விஜயகாந்த் இல்லத்துக்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இந்நிலையில் சினிமாவில் எத்தனையோ பேரை கரையேற்றி விட்டவர் விஜயகாந்த். அவரது மகன் சண்முக பாண்டியனுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்யலாம் என்கிற எண்ணம் தனக்குள் தோன்றியது என்றும் சண்முக பாண்டியன் நடித்துவரும் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

மேலும், யாரிடமாவது டபுள் ஹீரோ சப்ஜெக்ட் இருந்தால் தானும் சண்முக பாண்டியனும் அந்தப் படத்தில் நடிக்க தயார் என்றும் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

மூத்த மகன் விஜய பிரபாகரன் அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், இளைய மகன் சண்முக பாண்டியனுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்யப் போவதாக அறிவித்து இருக்கிறார் ராகவா லாரன்ஸ். சண்முக பாண்டியன் நடிப்பில் படைத்தலைவன் படம் ரிலீசுக்கு தயாராகி ரொம்ப நாட்களாக கிடப்பில் உள்ள நிலையில், அந்த படத்தில் கேமியோ ரோலில் நடிப்பாரா? அல்லது புதிய படத்தில் நடிப்பாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.