கார்த்தி தமிழ் சினிமாவில் தரமான படங்களாக கொடுத்து முன்னணி ஹீரோவாக உயர்ந்துள்ளார். பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமான கார்த்தி முதல் படத்திலேயே முத்திரையை பதித்தார். எந்த ஒரு ஹீரோவுக்கும் முதல் படம் இந்தளவிற்கு ஒரு தரமான வெற்றிப்படமாக அமைந்ததில்லை எனலாம்.

இந்நிலையில் அவரின் 25 ஆவது படமாக சமீபத்தில் வெளியான ஜப்பான் திரைப்படம் மிகப்பெரிய தோல்விப்படமாக மாறியது.

ராஜு முருகனுடன் கார்த்தி கூட்டணி அமைத்தவுடன் இப்படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஜப்பான் திரைப்படம் ரசிகர்களை ஏமாற்றி தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக கார்த்தியின் மார்க்கெட்டும் சற்று ஆட்டம் கண்டது. ஜப்பான் திரைப்படத்தால் கார்த்தி கடுமையான விமர்சனங்களையும் சந்தித்தார்.

இந்நிலையில் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப கார்த்தி ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார். தன் வெற்றிப்படங்களில் இரண்டாம் பாகங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளார் கார்த்தி. அதன்படி வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கும் கார்த்தி, மித்ரனின் இயக்கத்தில் வெளியான சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவுள்ளார்.

அதன் பிறகு லோகேஷ் கனகராஜின் கைதி 2 படத்திலும் கார்த்தி நடிக்க இருக்கின்றார். இவ்வாறு கார்த்தி தொடர்ந்து இரண்டாம் பாகங்களில் நடித்து அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுக்க முடிவெடுத்துள்ளார்.